-
ராஜீவ் படுகொலையில் 'றோ' தொடர்பு என சிறிலங்கா உளவுப்பிரிவு சந்தேகம்?
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்வதற்கு பயன்படுத்திய ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து இந்தியா புலனாய்வு பிரிவான றோவினால் தற்கொலைதாரிகளுக்கு வழங்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவுக்கு நெருக்கிய வட்டாரங்களிலிருந்தே இத் தகவல் கசிய விடப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.
பயங்கரவாதம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவரும், விடுதலைப்புலிகளின் சர்வதேசத் தொடர்பாளரான கே.பி.யின் கைதில் முக்கிய பங்காற்றியவருமான, சிங்கப்பூரை தளமாக கொண்டியங்கும் றொகான் குணவர்த்தன, ராஜீவ் கொலை தொடர்பான ஆய்வில், மேற்கண்ட குற்றச்சாட்டைக் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் சிறிலங்கா உளவுத்துறைசார் ஊடகங்கள் வாயிலாக இது விடயம் கசிய விடப்பட்டிருப்பதாகவும் அறியப்படுகிறது.
கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைத்திருக்கும், குமரன் பத்மநாதன் எனும் கே.பி.யை விசாரிப்பதற்கு இந்தியா விடுத்த கோரிக்கைகள் சிறிலங்கா அரசினால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்ட நிலையில், இருநாடுகளின் புலனாய்வு பிரிவினருக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பாசக்காரப் புள்ளைகளாகப் பழகும் சிறிலங்கா, இந்தியா அரசுகளுக்கிடையில் இந்த முறுகல் சிறு அதிருப்தியைத் தோற்றுவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படும் கே.பியிடமிருந்து, விடுதலைப்புலிகள்தான் அக்கொலையைச் செய்தார்கள் என ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைப் பெற்று, அந்த வழக்கை முடித்துவிட இந்திய உளவுத்துறை விரும்புவதாகவும், ஆனால் இந்த வழக்குடன் தொடர்புபட்டுள்ள இந்தியப்புலனாய்வுத்துறையையும், முக்கிய புள்ளிகளையும், சிறிலங்கா அச்சுறுத்தி வைத்திருப்பதற்காகவே இதுவரையில் கே.பியை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை எனவும் வெளிவந்துள்ள தகவல்களினடிப்படையில் ஊகந் தெரிவிக்கப்படுகிறது.
இதே சமயம் பாகிஸ்தானில் சிறிலங்கா கிரிக்கெட்அணிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் புலனாய்வுப்பிரிவினரால் கே.பி. விசாரிக்கப்படுவதற்கு சிறிலங்கா அரசு அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்: