Advertisement



  • ராஜபக்சவிற்கு உயிரச்சுறுத்தல். ,பொன்சேகா விசாரணைக்கு ஒத்துழைப்பில்லை : வாய் திறக்க மறுத்துள்ளார்.

    ராஜபக்சவிற்கு உயிரச்சுறுத்தல்.

    ஜெனரல் பொன்சேகாவின் சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்சவிற்கு கடந்த சனிக்கிழமை இரவிலிருந்து தொலைபேசி ஊடாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. விஜயதாஸ ராஜபக்ச அவர்கள் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஜெனரல் பொன்சேகா சார்பாக வழக்குத்தாக்குதல் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜெனரல் பொன்சேகா உட்பட நாட்டின் பிரஜைகள் சகலருக்கும் சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கு இலங்கையின் யாப்பில் இடமுண்டு என தெரிவித்துள்ளார். 

    அதிரடி ஆட்டநாயகன் சனத் அரசியலில் குதிக்கின்றார்.

    இலங்கையின் கிரிக்கட்துறையில் அதிரடி ஆட்டநாயகனாக தன்னை பதிவு செய்து கொண்டுள்ள சனத் ஜெயசூரியா அரசியலினுள் நுழைகின்றார். அவர் எதிர்வரும் பொது தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவார் என தெரியவருகின்றது. இவ்விடயத்தினை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல் தயாராகியுள்ளதாகவும், அது தொடர்பாக இன்று பிற்பகல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரால் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 


    பொன்சேகா விசாரணைக்கு ஒத்துழைப்பில்லை : வாய் திறக்க மறுத்துள்ளார்.

    இராணுவ விசாரணையில் இருந்து வரும் இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, விசாரணையின்போது வாய் திறக்க மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தடுப்புக்காவலிலுள்ள பொன்சேகா தன்னை இராணுவ நீதிமன்றில் விசாரிக்கமுடியாது என்றும் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற தான் சாதாரண பொதுமகன் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

    ஆனால் அவரை மூவர் அடங்கிய இராணுவ நீதிபதிகளின் முன்னால் விசாரணை செய்வதற்கு அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பொன்சேகா மீதான விசாரணைகளை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரிக்கும் பொறுப்பை படைகளின் தளபதி தயா ரத்நாயக்கவிடம் ஒப்படைத்துள்ளார் இராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியா.

    ஆனால், இராணுவ விசாரணைகளுக்கு தான் முகம் கொடுக்கப்போவதில்லை என்றும் தான் சாதாரண பொதுமகன் என்ற வகையில், தன்னை சிவில் நீதிமன்றத்திலேயே விசாரணை செய்யவேண்டும் என்று வலியுறுத்திவரும் பொன்சேகா, இராணுவ விசாரணைகள் தொடர்பில் இன்னமும் எந்த தகவலையும் வெளியிட மறுத்துவருகிறார்.

    இதேவேளை, பொன்சேகா தொடர்பான ஆதாரங்களை சேகரித்த பின்னர், அவர் மீதான இராணுவ நீதிமன்ற விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு, முன்னாள் படைகளின் தளபதியும், விமானப்படை தளபதியுமான ரொஹான் குணதிலக்க தலைமையில், முன்னாள் இராணுவ தளபதிகளான ரொஹான் தளுவத்த மற்றும் சாத்த கோட்டேகொட ஆகியோர் அடஙகிய மூவர் அடங்கிய குழுவை நியமிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் நபரை விசாரணை செய்வதற்கு, அவருக்கு சமமான அல்லது கூடுதலான தகுதியடைய அதிகாரிகள் கொண்ட குழுவினரையே நியமிக்கவேண்டும் என்ற சட்டத்திற்கேற்ப மேற்படி விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், தடுப்புக்காவலிலுள்ள பொன்சேகா இராணுவ விசாரணைகளுக்கு எந்த பதிலும் அளிப்பதில்லை என்று விடாப்பிடியிலிருப்பதால், அவர் தொடர்ந்து இந்த நிலைப்பாட்டை கடைப்பிடித்தால், என்ன நடவடிக்கை எடுப்பது என்பதில் பாதுகாப்பு அமைச்சக மட்டத்தில் சட்டக் குழப்பநிலை காணப்படுவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

    தனுக்க திலகரட்ணவின் தாயாரின் லொக்கரில் யுஎஸ் டொலர்கள் உண்டாம்.

    ஜெனரல் பொன்சேகாவின் மருமகன் தனுக்க திலகரட்ணவின் தாயாரின் பாதுகாப்பு லொக்கரை கடந்த வெள்ளிக்கிழமை சீஐடி யினர் சீல் வைத்திருந்தனர். தனுக்கவின் தாயாரின் முன்னிலையில் அவ் லொக்கரை இன்று திறந்து சோதனை செய்த சீஐடி யினர் லொக்கரில் 525.000 அமெரிக்க டொலர்கள் இருக்க கண்டுபிடித்துள்ளனர் என அததெரண இணையத்தளம் தெரிவிக்கின்றது.

    இப்பணம் தொடர்பாக தனுக்கவின் தாயான அசோகா திலகரட்ணவிடம் சீஐடி யினர் விசாரணை செய்தபோது, ஜெனரல் பொன்சேகாவினுடைய பணம் எனவும் அவரின் வேண்டுதலுக்கு இணங்க தான் இப்பணத்தை தனது லொக்கரில் வைத்திருந்தாகவும் அவர் தெரிவித்தாக அவ்விணையம் மேலும் தெரிவிக்கின்றது.

    தனுக்க திலகரட்ண தனக்கு சொந்தமான ஆயுத வியாபார முகவர் நிறுவனம் ஒன்றினூடாக இலங்கை இராணுவத்திற்கான ஆயுத வழங்கல் கொந்தராத்துக்களை செய்திருந்தாகவும், அவற்றினூடாக ஜெனரல் பொன்சேகாவின் உதவியுடன் பெருந்தொகையான தரகு கூலிகளை பெற்றிருந்தாகவும் அரசதரப்பினால் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளார் என்பதும் அவரது கடந்த கால ஆயுத வழங்கல்கள் தொடர்பாக இலங்கை அரசு அதிதீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதும் யாவரும் அறிந்தவிடயமே.



0 கருத்துரைகள்:

Leave a Reply

Featured Video

Photos